Friday 17 July 2015

தேவதையின் பிறந்தநாள்!

தேவதையின் பிறந்தநாளை  கொண்டாட
என் தோட்டத்து மலர்களும் பூத்துக்குலுங்கின..!
அன்பே உன் பிறந்தநாளில் உன்னை வாழ்த்த
மழைத்துளிகளும் மண்ணை நனைத்தன..!
நீ நினைத்தவை எல்லாம் வெற்றி பெற
கோவில் மணிகளும் நீங்காமல் ஒலித்தன..!
நித்தமும் உன் உதட்டில் சிரிப்பு தவழ
பிரார்த்தனைகளும் குவிந்தன..!
பதினாறும் பெற்று நீவிர் பெருவாழ்வு வாழ
பெற்றோரும் மனமுருகி வேண்ட..
அந்த கடவுளும் கனிந்து ஆசி கூறுவான்,
பூவே நீ இந்த மண்ணுலகில் வளமுடன் வாழ..!

Wednesday 15 July 2015

கலிகாலத்து மனிதன்!

கனவினை விற்று வாழக் கற்றுக்கொண்டோம்..
போதனைகள் விட்டொழித்து மதம் கொண்டோம்...
கலாச்சாரத்தை விற்று மேலை மயமானோம்...
உரிமைகளை இழந்து சுதந்திரம் பெற்றோம்..
பணத்திற்காக சுயமும் இழந்துவிட்டோம்..!

Thursday 9 July 2015

நவநாகரீக மனிதன்

சிரிப்பின் சாவியை பிறரிடம் கொடுத்து,
சிரிப்பினை தேடி அலையும்
சாவி கொடுக்கும் பொம்மைகள் - நவநாகரீக மனிதர்கள்! 

Wednesday 8 July 2015

அக்கா

சொப்பு  விளையாடும்பொழுது
பொய் கோபம் காட்டி,
விழுந்த பொழுதெல்லாம்
எனக்கு மருந்திட்டு ,
உடைந்த போதெல்லாம்
எனக்கு மறுஉரு தந்து,
உலகத்தில் படித்த
படிப்பினை சொல்லிதந்து,
தந்தையின் கண்டிப்பும்
தாயின் அன்பும் ஒருசேர,
நான்  பிறக்கும்பொழுதே பெற்ற இரண்டாம் அன்னை.. அக்கா!

அம்மா

கருவில் உயிருக்குயிராய் பார்த்து
மண்ணில் கண்ணுங்கருத்துமாய் வளர்த்து
நிலவை காட்டி சோறூட்டி
செல்லம், தங்கம் என சீராட்டி
அன்பின் உருவாய் அன்னை வலம்வர,
அந்த கடவுளும் ஏங்கிதான் போவான் - என் அன்னை மடியில் துயில்கொள்ள..! 

அப்பா

தோளில் அமர்த்தி வேடிக்கை காட்டி
துவண்ட போதெல்லாம் உற்சாகம் ஊட்டி
கனவெல்லாம் மெய்யாக துணைநின்று
உலகை நான் வென்று வர பார்வையாளனாக நிற்கும் தெய்வம் - அப்பா!